KollywoodNow

Tamil CInema Updates

ரணம் விவாதங்க:ளை உருவாக்கும் – சக்திவேலன்

அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும் போது,
வெளிநாட்டில் வேலை செய்து செட்டிலாகிவிட்டு, தன் கனவை துரத்தி, தன் ஆசையை நோக்கி வந்து தமிழ்நாட்டில் “ரணம்” அறம் தவறேல் படம் எடுத்திருக்கிறார்கள். அதையும் மூன்று நான்கு வேலைகளில் ஒன்றாகக் கருதாமல், அதற்கென்று பிரத்யேகமான கவனம் கொடுத்து அர்ப்பணிப்புடன் அதை உருவாக்கி இருக்கிறார் மது நாகராஜன். இது சாதாரண விசயம் இல்லை. சமீபத்தில் தான் அறிமுகம் ஆனார். இன்று என் நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒருவராக இருக்கிறார். பேசும் போது ஒரு மணி நேரத்தில் முக்கால் மணி நேரம் சினிமாவைப் பற்றிப் பேசுவார். மீதி பத்து நிமிடம் அவரின் குழந்தைகளைப் பற்றிப் பேசுவார். அந்த குழந்தைகள் மேல் எந்தளவிற்கு அன்பும் கவனமும் செலுத்துவாரோ அதே அளவிற்கு சினிமாவையும் நேசிக்கிறார். அவரது புரொடெக்ஷன் பெயரே குழந்தைகளின் பெயரையும் உள்ளடக்கி, மிதுன் மித்ரா மதுநாகராஜன் என்பதன் சுருக்கமாக MMM என்று வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

மர்டர் மிஸ்ட்ரி கதைக்களத்தை புதிய கோணத்தில், இப்படியெல்லாமா இருக்கும் என்று ஆச்சரியப்படுத்தும் தளத்தில் காட்டியிருக்கிறார். படத்தைப் பார்ப்பவர்களுக்கு இப்படிப்பட்ட காலகட்டத்திலா நாம் வாழ்கிறோம் என்பதான எண்ணத்தை ஆழ்மனதில் இப்படம் விதைக்கும். அறம் தவறாமல் நாம் வாழும் போது, அது இந்த சமுதாயத்திற்கு எந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்பதைப் பற்றிப் பேசும் படமாக இருக்கும். கொஞ்சம் கூட யோசிக்க முடியாத நாம் நினைத்தே பார்த்திராத திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் சேர்த்து சிறப்பாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஷெரீஃப். நல்ல ரைட்டிங் மற்றும் நல்ல இயக்கத்தை இப்படத்தில் நான் பார்க்கிறேன். இப்படம் நமக்குள் மிகச்சிறந்த விவாதங்களை உருவாக்கும். தரமான ஒரு படத்துடன் மிதுன் மித்ரா ப்ரெண்ட்ஸ் உள்ளே வந்திருக்கிறார்கள். இப்படம் வெற்றி அடைய வேண்டும். மிதுன் மித்ரா நிறைய படங்கள் செய்ய வேண்டும். ஒரு வருடம் முழுக்க புதுமுக இயக்குநர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்து தொடர்ச்சியாக படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் கம்பெனியாக இது வளர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்” என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *