வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் இன்று (ஆக.9) சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இயக்குநர் B.ராமச்சந்திரன் பேசுகையில், “இரண்டு வாரங்களுக்கு முன்பு உங்களை சந்தித்தோம், இப்போது மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி. பேச்சி படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா என்பது முதல் பட இயக்குநராக எனக்கு மிக முக்கியமானது. பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடுவது உள்ளிட்ட அனைத்து விசயங்களும் படத்திற்கான விளம்பரத்திற்காக தான் என்றாலும், என்னை பொறுத்தவரை பத்திரிகையாளர்களுக்கு போடப்பட்ட காட்சி தான் எனக்கான முக்கியமான தருணம். படம் போட்ட பிறகு நான் பதற்றத்துடன் நின்றுக் கொண்டிருந்தேன், காரணம் நீங்கள் தான் முதல் நீதிபதி, அனைத்து படங்களையும் பார்த்துவிட்டு நீங்கள் தான் எப்படி இருக்கிறது என்று சொல்லப் போறீங்க. அந்த வகையில், என் படத்தை பார்த்துவிட்டு, “தம்பி நல்லா பண்ணியிருக்கீங்க” என்று தட்டிக்கொடுத்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது. உங்களால் தான் படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது, அதனால் முதல் நன்றி உங்களுக்கு தான்.
அறிமுக இயக்குநராக நான் எவ்வளவு பெரிய ஐடியாவை வைத்து கதை எழுதினாலும், அதை திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய விசயம். பல படங்கள் தயாரித்து, சினிமா வியாபாரம் தெரிந்த ஒரு தயாரிப்பாளர் இந்த படம் நல்லா வரும், என்று முடிவு செய்து தயாரிக்கலாம். ஆனால், என்னுடன் நண்பனாக பழகிவிட்டு, என் மீது நம்பிக்கை வைத்து, என்னுடன் தயாரிப்பாளராக பயணித்த கோகுல் பினாயின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும், அவருக்கு எனது இரண்டாவது நன்றி. பிறகு எனது தொழில்நுட்ப கலைஞர்கள், நான் என்ன சொல்வேன், என் சிந்தனை எப்படி இருக்கும் என்பதை புரிந்துக்கொண்டு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கு நன்றி. படத்தில் நடிகர், நடிகைகளும் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். கடினமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தினாலும் எந்தவித கஷ்ட்டத்தையும் வெளிக்காட்டாமல் நான் என்ன சொன்னாலும் அதை செய்த பாலசரவணன், காயத்ரி ஆகியோருக்கு நன்றி. பேச்சியாக நடித்த சீனிபாட்டி இந்த வயதிலும் மலைமீது பயணித்து நடித்துக் கொடுத்தார், அவருக்கு பெரிய நன்றி. இன்று ரசிகர்கள் பேச்சி பாட்டி எங்கே என்று கேட்கிறார்கள்.
பல வருடங்களுக்கு முன்பு பேச்சி என்ற தலைப்பில் ஒரு குறும்படம் எடுத்தேன், அந்த படத்தை பார்த்துவிட்டு பாலுமகேந்திரா சார் என்னை பாராட்டியதோடு, அவருடன் என்னை சேர்த்துக்கொண்டு எனக்கு சினிமா சொல்லிக்கொடுத்தார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், வங்கி வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு நான் வந்தபோது எனக்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தாருக்கும், என்னுடன் எப்போதும் துணை நின்ற என் நண்பர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஜென பேசுகையில், “பேச்சி என்ற சிறிய படத்தை மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்ற மீடியாக்களுக்கு மிகப்பெரிய நன்றி. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராமச்சந்திரன் சாருக்கும், கோகுல் பினாய்க்கும் நன்றி. எனக்கு இது தான் முதல் ஸ்கீரின் பிரசன்ஸ். இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, இப்படி ஒரு வாய்ப்பை அமைத்துக்கொடுத்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.