தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டீசல்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இயக்குநர் சண்முகம் முத்துசாமி, “‘டீசல்’ படம் ஆரம்பித்ததில் இருந்து வெளியீடு வரை எந்த சோர்வும் இல்லாமல் இன்முகத்தோடு உழைத்த நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், பிரேம்குமார், தங்கதுரை மற்றும் என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஓப்பனிங் பாடல் பாடி கொடுத்த நடிகர் சிலம்பரசனுக்கு ஸ்பெஷல் நன்றி. இந்த காலத்தில் எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்ட தயாரிப்பாளர் தேவராஜுலு மார்கண்டேய சாருக்கு நன்றி. காதல் படங்கள், ஃபேமிலி சப்ஜெக்ட் எல்லாம் நிறைய பார்த்தாச்சு. ஏதாவது புதிதாக கதை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பெட்ரோல் பங்க்கில் நின்ற டேங்கர் லாரியிலிருந்து பக்கெட் பக்கெட் ஆக பெட்ரோல், டீசலை சிறுவர்கள் திருடி கொண்டிருந்தார்கள். அவர்களை பின்தொடர்ந்து சென்ற போது தான் இந்த அதிர்ச்சிகரமான உலகம் பற்றி தெரிய வந்தது. இதையே படமாக்கலாம் என்று உருவானதுதான் ‘டீசல்’. இதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் பற்றி நாங்கள் நிறைய தெரிந்து கொள்ள முயற்சித்தபோது உயிர் பயம் வரை அச்சுறுத்தல் நிகழ்ந்தது. இந்த மாஃபியாவால் ஒரு சாதாரண மனிதன் எந்த அளவிற்கு நேரடியாக பாதிக்கப்படுகிறான் என்பதை இதில் சொல்லியிருக்கிறோம். இந்த ‘டீசல்’ படத்தில் நிறைய ரகசியங்கள் இருக்கிறது. டேங்கர் லாரியில் இருந்து எண்ணெய் கொட்டுவது போல தயாரிப்பாளர் தேவராஜூலு சார் இந்தப் படத்திற்காக பணம் கொட்டியிருக்கிறார். ‘பாகுபலி’, ‘கத்தி’ போன்று அடுத்தடுத்து ரூ. 100 கோடி வசூல் செய்யும் பெரிய படங்களை நீங்கள் தயாரிக்க வேண்டும். தீபாவளிக்கு ‘டீசல்’ படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
உயிர் பயம் வரை அச்சுறுத்தல் நிகழ்ந்தது – இயக்குநர் சண்முகம் முத்துசாமி