அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் படம் சிறை. இப்படத்தில் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகிறார். இவரோடு விக்ரம் பிரபு, அனிஷ்மா, அனில் குமார், ஆனந்த தம்பி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை ஜஸ்டின் பிரபாகரன். இப்படத்திற்கு டாணாக்காரன் பட இயக்குநர் கதை எழுதி சுரேஷ் ராஜகுமாரியுடன் திரைக்கதையும் எழுதி இருக்கிறார். மேலும் உண்மை சம்பவ கதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் வரும் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் தற்போது புரமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் இப்படம் குறித்து விக்ரம் பிரபு கூறுகையில், “இந்தப் படம் என்னுடைய 25வது படம். பொதுவாக நான் பட நம்பரை கணக்கில் வைத்துக் கொள்வதில்லை. இருந்தாலும் 25வது படமாக இப்படம் அமைந்தது மகிழ்ச்சி. டாணாக்காரன் தமிழுடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். அந்தப் படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன். மயக்கம் போட்டு விழுந்து பின்பு ஷூட்டிங்கிற்கு ரெடியானேன். ஆனால் அந்த காட்சி வரவில்லை. அந்த மாதிரி ஒரு டீமுடன் மீண்டும் இணைந்திருக்கிறேன்.
இந்தப் படம் 2025ல் 25வது படம் 25ஆம் தேதி வெளியாகிறது. இது ரொம்ப ஸ்பெஷலாக இருக்கிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அவர் ஆசியில் இது நடக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி. தாத்தாவும், அப்பாவும் தங்களின் முதல் 25 படத்தில் சாதித்த அளவிற்கு நான் எதையும் சாதிக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். நான் நடித்த படங்கள் வெற்றியோ, தோல்வியோ ஆனால் நல்ல படங்கள் என்பதிலேயே எனக்கு திருப்திதான்.
அதிகமாக போலீஸ் கேரக்டரில்தான் நடித்திருக்கிறேன். எனது தோற்றத்தை மனதில் வைத்து அப்படியான கேரக்டரோடுதான் கதை சொல்ல வருகிறார்கள். இனி போலீஸ் கேரக்டரில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தபோத வந்த கதைதான் ‘சிறை’. ‘டாணாக்காரன்’ இயக்குனர் தமிழ் இந்த கதை உங்களை மனதில் வைத்து எழுதவில்லை. ஆனால் டாணாக்காரன் படத்தின் கேரக்டருக்கு உயிர் கொடுத்தது போன்று இந்த படத்தின் கேரக்டருக்கு உயிர்கொடுக்க உங்களால்தான் முடியும் என்று சொன்னதால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
டாணாக்காரன் படத்தில் பயிற்சி போலீஸ் என்பதால் எடை குறைத்து நடித்தேன். இதில் அதிகாரி என்பதால் எடையை கூட்டி நடித்திருக்கிறேன்.
25 படங்களில் நடித்து விட்டேன். அடுத்து வரும் 25 படங்களில் ஏதாவது சாதித்து காட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். எங்கள் அன்னை இல்லம் பற்றி வரும் தகவல்களி. குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும் எல்லாவற்றையும் பேசி சரி செய்து விட்டோம். இனிமேல் அப்படி நடக்காது. சீக்கிரமே அன்னை இல்லத்தில் விருந்து வைக்கிறேன். அதையும் நானே வைக்கிறேன் என்றார் விகரம் பிரபு
தாத்தா அப்பா சாதித்ததை போல நான் எதையும் சாதிக்கவில்லை – விக்ரம் பிரபு