KollywoodNow

Tamil CInema Updates

சினிமா ஆயுதங்களை விட வலிமையான கலை வடிவம் – கார்த்திக் சுப்புராஜ்

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

‘நீளிரா ‘ திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை மார்ட்டின் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ராதா ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் வழங்குகின்றன.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “முதலில் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. அதன் பிறகு திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கினோம். எப்படிப்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்பினேனோ அப்படிப்பட்ட படங்களை தயாரிக்க முன்வந்தோம். பொதுவாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் எல்லா படத்திற்கும் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் என்று தான் இருக்கும். படத்தின் தயாரிப்பாளராக கார்த்திகேயன் சந்தானம் இருப்பார். ஆனால் முதன் முறையாக நானாக இப்படத்தின் தயாரிப்பாளர் பெயரில் என் பெயரும் இடம்பெற வேண்டும் என்று விரும்பி கேட்டேன். அப்படி ஆசைப்பட்ட திரைப்படம் இது.‌

இந்த படத்திற்கு முன் இயக்குநர் சோமீ மிகப்பெரிய டாக்குமெண்ட்ரி இயக்குநர். இலங்கையில் போர் நடக்கும் போது போரை பற்றிய ஆவண படத்தை இயக்கியவர்.‌ அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட. அவருடைய கதையை அவரே எழுதி இருக்கிறார். அவரிடம் இன்னும் நிறைய ஏராளமான கதைகள் உள்ளது.

எனக்கு ஈழம் சம்பந்தமாக ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு உண்டு. கார்த்திகேயன் சொன்னது போல் ‘காட்சி பிழை’ தான் என்னுடைய முதல் குறும்படம். அதன் மூலமாகத்தான் நான் நாளைய இயக்குநரில் தேர்வானேன்.

பொதுவாக சின்ன வயதாக இருக்கும் போது ஒரு ஏரோபிளேன் சென்றால் … அதை பார்க்கும்போது உற்சாகமாக இருக்கும். மதுரையில் ஒரு ரிக்ஷாவில் சென்று கொண்டிருக்கும் பசங்களுக்கு ஏரோபிளேன் எப்படி மகிழ்ச்சியை அளிக்குமோ… ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பிள்ளைக்கு அம்மா சோறு ஊட்டிக் கொண்டிருக்கும்போது அவர்களுடைய பார்வையில் ஏரோபிளேனை காண்பித்து எப்படி சோறு ஊட்டுவார்களோ.. இப்படி பலருக்கு ஏரோபிளேன் பறப்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என்பதை காட்சிப்படுத்தினேன். அதேபோன்று ஏரோபிளேன் பறக்கும் போது ஈழத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும் என்பதுதான் அந்த குறும்படத்தில் நான் சொல்லி இருப்பேன்.

போரை பற்றிய நிறைய கிளாசிக்கல் ஃபிலிம் இருக்கிறது. 1917 என்ற படத்தை போல் போருக்குள் ஆக்சன் படங்களும் இருக்கும். லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்று இயக்குநர் குறிப்பிட்டார்.

‘தி பியானிஸ்ட் ‘படத்தில் இரண்டாம் உலகப்போர் குறித்து நமக்கு எதுவும் தெரியாது. அந்தக் காலகட்ட வாழ்க்கை பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஒரு பியானோ பிளேயரை பற்றிய படம். அதில் ஒரு காட்சி வரும். அவரால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல முடியாது. நீண்ட நாட்கள் கழித்து அவர் ஒரு பியானோவை பார்ப்பார். அவர் ஒரு இசைக் கலைஞர். பியானோவை பார்த்தவுடன் அதை வாசிக்க வேண்டும் என்று துடிப்பார். அதை வாசிக்க வேண்டும் என்று நினைப்பார். அப்படி வாசித்தால் அந்த ஒலி வெளியில் கேட்டு குண்டு வீச கூடும். இந்த நிலையில் அந்த இசைக் கலைஞர் பியானோ இசைக்கருவியை தொடாமல் அதை அற்புதமாக வாசிப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும்.‌ அது எனக்கு ஒரு அற்புதமான உணர்வை வழங்கியது. போரை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் மக்களின் மனநிலை எப்படிப்பட்டது என்பதை உணர வைத்தது.‌ இது போன்ற படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்பினேன்.

சோமீ குறிப்பிட்டதைப் போல் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து அந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஈழ மக்கள் மீது எனக்கு ஒரு எம்பதி இருந்தது. அதை கலை வழியாக கொண்டு வர வேண்டும் என்றும் விரும்பினேன். சினிமா ஆயுதங்களை விட வலிமையான கலை வடிவம் என்பதை உணர்ந்து இருக்கிறேன்.‌ உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் கலை படைப்புகள். வசூல் என்பதையெல்லாம் கடந்து இந்த சமூகத்திற்கு சில உண்மை கதைகளை அவசியம் சொல்ல வேண்டும். நாம் எல்லா பார்த்திடாத கேட்டிராத கதைகளை சொல்ல வேண்டும் என்பதுதான் சினிமா. ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது தான் சினிமா. அத்தகைய தருணத்தில் நான் சோமீயை சந்தித்தேன். அவருடைய எல்லா ஆவணப் படங்களையும் பார்த்தேன். பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றியவர். அவர் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்று நினைத்தபோது அவரிடம் இருந்து கதைகளை கேட்டோம்.

குறைந்த முதலீட்டில் நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள். தயாரிக்கிறோம். ஏனென்றால் அது எங்களின் கனவு என்று அவரிடம் சொன்னேன். ஈழத்தைப் பற்றிய கதையை இந்திய சினிமாவில் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்கும் ரசிகர்களுக்காக உருவாக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் நிறைய கதைகளை சொல்லும்போது இந்த நீளிரா கதையையும் சொன்னார். ஒரு திருமணம் – அதற்காக இரவில் நடைபெறும் சடங்குகள் – சம்பிரதாயங்கள் என்று சொன்னார். அதைக் கேட்கும் போது மிகவும் எமோஷனலாக இருந்தது. அதே தருணத்தில் அது ஒரு திரில்லராகவும் இருந்தது. இதனை ஒரு சர்வைவல் திரில்லர் என்றும் சொல்லலாம்.

போரை பற்றிய எந்த சிந்தனையும் இல்லை என்றாலும் இந்த படம் பார்க்கும்போது இது ஒரு அசலான திரில்லர் திரைப்படம் என்ற அனுபவத்தை வழங்கும்.

தற்போது ஈரானில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் இங்கு ஒரு திருமணம் நிற்கிறது. அதனால் உலகத்தில் எங்கோ நடைபெறும் ஒரு போரின் தாக்கத்தை நம்மால் உணர முடிகிறது. இந்த சூழலில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பகுதியில் திருமணம் எப்படி நடந்திருக்கும் என்பதை எம்மால் எளிதாக புரிந்து கொள்ள இயலும். அதுவும் இந்த திரைப்படம் சுவாரசியங்களுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லப்பட்ட ஒரு கதையாக உருவாகி இருக்கிறது. குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். நடித்த நடிகைகள் நடிகர்கள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறோம். தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *