இந்தியாவின் எடிசன் என்று செல்லமாக அழைக்கக்கூடிய ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். அவினாசியில் பிரிட்டிஷ்காரர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை வைத்து தனது மெக்கானிக்கல் வாழ்க்கையை தொடங்கும் கோவிந்தசாமி துரைசாமி நாயுடு பிரிட்டிஷ் அரசின் வரிவிதிப்புக்கு இடையே தனது புதிய புதிய கண்டுபிடிப்புகளை எப்படி வெளிக்கொண்டு வருகிறார் என்பதை திரைக்கதையாக்கி காட்டியிருக்கிறார்கள்.
ஜி.டி.நாயுடுவின் இளமைக் காலம் அவர் சந்திக்கும் விவசாய போராட்டம், பிரிட்டிஷ் அதிகாரியின் உதவியால் கண்டுபிடிப்புகளுக்கு விதை போடுவது என்று அந்த காலகட்டத்திற்கே படத்தை எடுத்துச்செல்ல முயற்சிக்கிறார்கள். ஜி.டி.நாயுடு வளர்ந்து மாதவன் உருமாற்றம் அடைவது வரை அவசர அவசரமாக திரைக்கதை நகர்கிறது. இதனால் மனதில் ஒட்டவில்லை. மாதவன் நடிப்பில் பல்வேறு பாவனைகளைக் காட்டினாலும் ஜி.டி.நாயுடுவை பார்க்க முடியவில்லை. மாதவன் முன்னுக்கு வந்து நிற்கிறார். ஜி.டி.நாயுடுவின் தோற்றம் அவரை பரிதாபம் கொள்ள வைக்கும். ஆனால் மாதவன் படம் முழுவதும் உடல் மொழியில் ஒரு தெனாவெட்டு தெரிவது கதாபாத்திரத்தை பின்னுக்குத் தள்ளி விடுகிறது.
படம் தொடங்கும்போது காங்கிரஸ் ஆட்சியாளர்களை தாக்கும் நோக்கத்தோடு காட்சியை வைத்திருப்பது உறுத்தலாக இருக்கிறது. நாயுடு கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்த படத்தில் பல காதாபாத்திரங்களை எளிதாகா கடந்து போயிருப்பது உண்மைக்குப் புறம்பாக இருக்கிறது.
அரசு அதிகாரிகளால் விஞ்ஞானி துரைசாமி நாயுடுவுக்கு ஏற்பட்ட சிக்கல்கள், அதனால் அவரது மனம் வெறுத்துப்போய் நடந்துகொள்ளும் விதம் இதையெல்லாம் பதிவு செய்திருப்பதற்கு பாராட்டுகள். அதேசமயம் முதல் மனைவியை விட்டு விலகியிருப்பதை ஏனோதானோவாக்கக் காட்டிருப்பதி தவிர்த்திருக்கலாம்.
குறிப்பாக பெரியார் ஈ.வெ.ராமசாமிக்கும், விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவுக்கும் இருந்த நட்பை உஅலகம் அறியும். ஆனால் அதை சொன்ன விதமும், பெரியார் பாத்திரத்தை காட்டி முறையும் நிறைய முரண் இருக்கிறது. சத்யராஜ் கதாபாத்திரம் ரசிக்க முடிகிறது.
ஒரு இயக்குனராக கிருஷ்ணகுமார் ராம்குமார் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு வாழ்த்தும் பாராட்டும். ஆனால் அதை முறையாக திரைக்கதைப்படுத்தவோ, காட்சிப்படுத்தோ இயலாதது பலவீனம். ஜெயராம் பாத்திரம் வந்தபிறகு படத்தில் ஒரு வேகம் வருகிறது. ஆனாலும் அவரும் ஒரு நடிகராகத்தான் தெரிகிறார்.
பிரியாமனி, துஷாரா விஜயன், ஜெயராம், சத்யராஜ், வினய்ராய், கருணாகரன், அதிதிபாலன் மோகன் ராமன் ஆகுயோர் தங்கள் பங்கை நிறைவாக்கியிருக்கிறார்கள்.
கோவிந்த் வசந்தாவின் இசை கவனம் பெறுகிறது. அரவிந்த் கமல்நாதன் ஒளிப்பதிவு பிரிட்டிஷ் காலகட்டத்தையும், ஹிட்லர் ஜெர்மனியின் காலகட்டத்தையும் ரசிக்கும்படி காட்டியிருக்கிறது. படத்தில் காட்சிகளில் கிராண்டியராக இருப்பதை தவிர்த்திருக்கலாம்.
ஜி.டி.நாயுடு – பதிவு
ஜி.டி.நாயுடு – விமர்சனம்