தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அரசியல், திரைத்துறை, கல்வி, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, ஆர்.எம்.வீரப்பனின் வாழ்க்கை, அரசியல் பயணம் மற்றும் திரைத்துறைக்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர்.
பெரியார் மற்றும் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர் ஆர்.எம்.வீரப்பன். பின்னர் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவைத் தொடங்கியபோது அவருடன் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு முன்னாள் முதல்வர்களின் அமைச்சரவைகளிலும் பணியாற்றிய அவர், 1977 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் ஐந்து முறை தமிழக அமைச்சராக பதவி வகித்துள்ளார். மேலும், மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் ஆர். எம். வீரப்பன் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்ததுடன், 20-க்கும் மேற்பட்ட வெற்றித் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிதயாரித்தும் உள்ளார். இவர் திரைக்கதை சித்தர் என்றும் திரையுலகில் அன்போடு அழைக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர். அவர்களின் காலம் தொடங்கி, தமிழ் சினிமாவின் பல்வேறு தலைமுறைகளிலும் தனது தயாரிப்புகளின் மூலம் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் ஆர். எம். வீரப்பன் அவர்கள். ‘ரிக்ஷாக்காரன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘தெய்வத் தாய்’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்து, எம்.ஜி.ஆர். அவர்களின் திரைவாழ்க்கையில் பெரும் உறுதுணையாக விளங்கினார். குறிப்பாக, ரஜினிகாந்த் நடித்த ‘மூன்று முகம்’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அரசியல் மற்றும் திரைத்துறை என இரு வெவ்வேறு களங்களிலும் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கிய ஆளுமையாக ஆர். எம். வீரப்பன் அவர்கள் விளங்கினார்.
ஆர்.எம்.வீரப்பனின் மருமகனான டி.ஜி.தியாகராஜன், தமிழ் திரையுலகில் பல தலைமுறைகளாகப் பயணித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களைத் தயாரித்து, வணிக வெற்றியுடன் தரமான படைப்புகளையும் வழங்கிய முக்கியமான தயாரிப்பு நிறுவனமாக சத்யஜோதி பிலிம்ஸ் திகழ்கிறது. அந்த வகையில், திரைத்துறையில் ஆர்.எம்.வீரப்பன் விட்டுச் சென்ற பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்புடையவராக டி.ஜி.தியாகராஜனும் தனது தயாரிப்புப் பயணத்தை முன்னெடுத்து வருகிறார்.
இந்தப் பின்னணியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவை டி.ஜி.தியாகராஜன் முன்னின்று ஒருங்கிணைத்தார். விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பிரபலங்களை வரவேற்று அவர் உரையாற்றினார். ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் பயணம், திரைத்துறைப் பங்களிப்பு, அவருடைய தனிப்பட்ட பண்புகள் மற்றும் வாழ்க்கை நெறிகளை நினைவுகூரும் வகையில் விழா அமைந்தது.
விழாவில் சென்னை கம்பன் கழகத் தலைவரும் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் பேசுகையில், “அரசியலில் ஆர்.எம்.வீ. போல் தூய்மையானவரைப் பார்க்க முடியாது. மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. அவருடைய நினைவுகளைப் பகிரும்போதும், அவர் நம்மிடையே இல்லையே என்ற குறை உள்ளது” என்றார்.