ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீராயி மக்கள்’.
விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர் வேல ராமமூர்த்தி பேசியதாவது,
இந்த மேடையில் எனக்கு மிகவும் பிடித்த எனக்கு நெருக்கமான இயக்குநர்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்குள்ள அத்தனை நபருடனும் எனக்கு ஒரு நல்ல நட்பு உள்ளது, இவர்கள் எல்லோருமே என்னைப் போல மண்ணை நேசிக்கும் மனிதர்கள், இந்தப் படத்தில் நான் மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். உண்மையில் சொல்ல போனால் நான் நடிக்க வில்லை, எனக்கு அந்த கதாபாத்திரம் இயல்பாகவே பொருந்தி விட்டது. இந்தப் படத்தில் நடிக்கும்போது என் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வு இருந்தது. என் அம்மாவைப் போல இந்த வீராயி என் கண் முன்னே தோன்றினார். படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இயக்குநர் நாகராஜ். இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே இப்படி ஒரு படத்தை உருவாக்க முடியும், ஒவ்வொரு காட்சியையும் ரசித்து உருவாக்கியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள், நிச்சயம் இந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு நீண்ட நல்ல எதிர்காலம் இருக்கிறது. மேலும் தயாரிப்பாளர் கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் பெரிய வெற்றியை ஈட்டுவார், இது போன்ற படங்களை மேலும் தயாரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுவார் என நம்புகிறேன். படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள் நன்றி.