மலை கிராமத்தில் வாழும் நாயகன் மதி, சிறு வயதில் வழி தவறி பள்ளத்தில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றுகிறார். அதில் இருந்து அந்த குட்டி யானை மதியை சுற்றி சுற்றி வருகிறது. பாசத்திற்காக ஏங்கும் மதி யானையின் பாசத்திற்கு அடிமையாகி அதை வளர்க்கிறார். யானையும், மதியும் வளர்ந்து சகோதரர்களைப் போல் எப்போதும் ஒன்றாகவே இருக்க, ஒருநாள் திடீரென்று யானை மாயமாகி விடுகிறது. யானையை தேடி அலையும் மதி ஒரு கட்டத்தில் அதன் நினைவில் தன்நிலை மறந்தவராக வலம் வருகிறார்.
இதற்கிடையே ஆசிரியரின் அறிவுரையால் கல்லூரி படிப்புக்காக தன் ஊரை விட்டு செல்லும் மதி, 5 வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கு திரும்புகிறார். அப்போது மாயமான யானை பற்றிய தகவல் ஒன்று அவருக்கு கிடைக்கிறது. அந்த தகவலை வைத்து யானையை தேடி செல்லும் மதிக்கு அவரது யானை கிடைத்ததா என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.
அறிமுக நாயகன் மதி எந்தப் பதட்டமும் இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார். அதுவும் முதல் படத்திலேயே யானையுடன் நடிப்பது என்பது சவாலான விஷயம். அதையும் ஏற்று திறம்பட நடித்திருப்பவர் இனிவரும் காலங்களில் கவனமாக இருந்தால் முன்னணி ஹீரோவாகலாம்.
கதாநாயகி என்றால் அவர் நாயகனுடன் ஜோடி போட வேண்டுமென்ற அவசியமிலலை என்கிற அளவில் ஷிரிதா ராவ், சவுண்ட் இன்ஜினியராக வந்து சத்தம் இல்லாமல் கவர்கிறார்.
சி. எம்மின் உதவியாளராக வரும் ஆகாஷ், அவர் உதவி கோரும் வில்லன் அர்ஜுன் தாசின் நடிப்பு மிரட்டுகிறது.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆண்ட்ரூஸ், வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், அரசியல்வாதியின் உதவியாளராக நடித்திருக்கும் ஆகாஷ், காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி ஆகியோர் நிறைவு. ஸ்ரீநாத் உள்ளிட்ட பிற வேடங்களில் வருபவர்கள் அவற்றை நிறைவாக நிரப்புகிறார்கள்.
ஒளிப்பதிவு எம்.சுகுமார் என்றாலே அண்ணா அண்ணாந்து பார்க்கும் அருவிகளை ஆகாசத்தில் இருந்து பார்க்கலாம். மிரட்டலான ஒளிப்பதிவு. நிவாஸ் கே பிரசன்னாவின் இசையும் சிறப்பாக இருக்கிறது.
திரைக்கதையை கையாண்டிருக்கும் விதத்தில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் பிரபு சாலமன் இனிமேல் யானையை காட்டிலேயே விட்டு விட்டு அடுத்த கதைக்களத்தை தேடிப்பிடிக்க வேண்டும்.
அதுவரைக்கும் யானையை கும்கி 2 படத்தை பாதி ரசிக்கலாம்.
கும்கி 2 – பலம் இல்லை