நடுத்தர குடும்பத்தலைவரான கிஷோர் சுபத்ரா ராபர்ட் ஆகிய இருவரும் தங்கள் குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார்கள். கிஷோர் தனது நிறைவேறாத ஆசைகள் எல்லவற்றையும் தனது குழைந்தைகள் மீது திணிக்கும் வகையில் பயணிக்கிறார். இதனால் தான் வெற்றி பெற முடியாமல் போனது போல தனது குழந்தைகளும் ஆகிவிடக்கூடாது என்று அழுத்தம் கொடுப்பதால் குழந்தைகளுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு வருகிறது.
இவர்களுக்கு இடையில் சுபத்ரா ராபர்ட் தவித்துக் கொண்டிருக்கும் தாயாக இருக்கிறார். பிடி.மாஸ்டராக தனது பணியை தொடர முடியாமலும், பாடகராக வெற்றி பெற முடியாமலும் போராடிக்கொண்டே வாழ்வின் இறுதிகட்டம் வரை வருகிறார் கிஷோர்.
தனது அப்பாவின் கனவை பிள்ளைகள் எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதையும், அப்பாவின் வீட்டை மீட்கிறார்களா என்பதையும் கவிதையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் திருவ்.
கிஷோர் அழகான அமைதியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். குழந்தைகளுக்காக அவர் நடத்தும் பாசப்போராட்டம் மனதைத் தொடுகிறது. மாஸ்டராக இருந்து கொண்டே பாடகராக தனது பணியைத் தொடர முடியாத சூழலும், கடனை அடைக்க தவிக்கும் தவிப்பும் கதையை தாங்கி நிற்கிறது.
சுபத்ரா ராபர்ட்டுக்கு படம் நெடுகிலும் வரும் அழகான கதாபாத்திரம். இன்னும் அவருக்கு சரியான வாய்ப்பை கொடுக்காமல் தமிழ் சினிமா நல்ல நடிகையை இழந்திருக்கிறது.
படத்தின் பிற கதாபாத்திரங்கள் தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். திரைக்கதையில் இருக்கும் கற்பனை வறட்சியால் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல முடியவில்லை.
கதையின் களமும், குடும்ப சூழலும் மனதை சோர்வடைய வைக்கிறது.
மெல்லிசை – மெதுவாகவே கேட்கிறது.
மெல்லிசை – விமர்சனம்