ஆண்டு 2016… நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு கொல்கத்தாவில் ஓர் உயர்மட்ட விளையாட்டு ஆய்வுக் கூட்டம் கூடுகிறது. நாட்டின் மோசமான ஆட்டத்தால் கோபமடைந்த விளையாட்டுத் துறை அமைச்சர், அதிகாரிகளை வறுத்தெடுக்கிறார். நாட்டின் கடைக்கோடி கிராமங்களில் இருக்கும் திறமைசாலிகளை கண்டறியும் பொறுப்பு ஒரு மத்திய அரசு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
விஜயநகரம் என்ற குக்கிராமத்துக்கு செல்லும் அந்த அதிகாரி அங்கே, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கிரிக்கெட் மட்டைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் தேர்வுகளுக்காக வரிசையில் நிற்பதை காண்கிறார். இந்த விளையாட்டு புரட்சிக்குக் காரணம் ‘பெத்தி’ என்ற மனிதன் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. யார் இந்த பெத்தி என்பதை சொல்ல படம் விரிகிறது.
ராம்சரண் தோற்றமும், நடிப்பும் ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அதுவும் புறக்கணிக்கப்பட்ட கிராமத்து மக்களின் வலியையும் பிரதிபலித்திருக்கிறார்.
கிரிக்கெட் மைதானத்தில் ஹீரோவாக கொண்டாடப்படும் ராம் சரண், தனது கிராமத்திற்கு திரும்பும்போது ஒரு சாதாரண மனிதனாக கூட மதிக்கப்படவில்லை. காரணம், அவர் வாழும் மக்களுக்கு சமூக அங்கீகாரமும், அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டிருப்பது. இந்த முரண்பாடே படத்தின் முக்கிய பலம்.
ராம் சரண் தனது நடிப்பின் மூலம் கதாபாத்திரத்தின் கோபம், ஏக்கம், கனவு, போராட்டம் அனைத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக தனது ஊரின் அவல நிலையை உணரும் தருணங்களில் அவரது நடிப்பு படத்திற்கு உயிரூட்டுகிறது.
ஜான்வி கபூரின் அச்சியம்மா கதாபாத்திரம் கதைக்கு மென்மையான உணர்ச்சிகளை சேர்க்கிறது. காதல் காட்சிகளில் மட்டுமல்லாமல், கதையின் உணர்வு சார்ந்த தருணங்களிலும் அவர் தனது பங்களிப்பை அளித்திருக்கிறார்.
சிவராஜ்குமார் நடித்த கௌர் நாயுடு, படத்தின் மிக முக்கியமான தூணாக இருக்கிறார். அவரது அனுபவமும் திரை ஆளுமையும் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. குஸ்தி களத்தில் மட்டுமல்ல, வாழ்க்கை போராட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற கருத்தை அவரது பாத்திரம் வலுவாக எடுத்துரைக்கிறது.
ஜகபதி பாபு நடித்துள்ள அப்பல சூரி, ஒரு சமூகத்தின் பல வருட ஏக்கத்தை பிரதிபலிக்கிறார். ரயில் நிறுத்தம் போன்ற அடிப்படை வசதிக்காக கூட போராட வேண்டிய நிலையை அவரது கதாபாத்திரம் உணர்ச்சிகரமாக பதிவு செய்கிறது.
இயக்குநர் புச்சி பாபு சனா, விளையாட்டு, சாதி அரசியல், சமூக நீதி மற்றும் மனித உணர்வுகளை ஒன்றாக இணைத்து வலுவான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். படம் சில இடங்களில் மெதுவாக நகர்ந்தாலும், அதன் நோக்கம் மற்றும் உணர்வுகள் பார்வையாளர்களை கதையுடன் இணைத்து விடுகின்றன. A.R. ரஹ்மானின் இசை படத்தின் உணர்வுகளை பல மடங்கு உயர்த்துகிறது. குறிப்பாக போராட்டக் காட்சிகள் மற்றும் வெற்றியின் தருணங்களில் பின்னணி இசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ரத்னவேலுவின் ஒளிப்பதிவு மலைக்கிராமத்தின் வாழ்க்கையையும் அதன் இயற்கை அழகையும் அற்புதமாக பதிவு செய்திருக்கிறது.
பெத்தி – வரலாறு