நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
பாடலாசிரியர் யுகபாரதி, “உதவி இயக்குநராக இருந்தபோதிருந்தே மீரா கதிரவனை எனக்கு தெரியும். தனிப்பட்ட முறையில் இப்படியான வெற்றிக்குதான் இத்தனை வருடங்களாக அவர் கடுமையாக உழைத்தார். இதனை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, கஸ்தூரி ராஜா அவர்களை நடிகராக பார்ப்பது மகிழ்ச்சி. இனி வரும் வெற்றிப் படங்களில் எல்லாம் கஸ்தூரி ராஜாதான் அப்பாவாக தப்பாமல் இருப்பார். இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவில் வரவில்லை எனும் சொல்லுமளவுக்கு இஸ்லாமியர்கள் வாழ்வியலை இந்தப் படத்தில் மீரா கதிரவன் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் எண்பதுகளுக்கு பிறகு இஸ்லாமியர்களை ஏன் தீவிரவாதிகளாக காட்டுகிறார்கள் என்ற விவாதம் நடந்தது. அப்பொழுது தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்கள் அனைவரும், இஸ்லாமியர்கள் வாழ்வை நெருக்கமாக தெரிந்தவர்கள் தான் அவர்கள் குறித்த உண்மையான படம் எடுக்க முடியும். அதனால், மீரா கதிரவனை படம் எடுக்கச் சொன்னார்கள். அப்போது அவர் சம்மதம் தெரிவித்து மனதில் தாங்கிய கதையே ‘ஹபீபி!’ ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இது படமாக வெளிவந்து வெற்றி பெற்றிருப்பது நிறைவாக உள்ளது” என்றார்.