யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டும் புதிய தலைமுறை கலைஞர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றனர். அந்த வரிசையில், ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படமும் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு கிளிம்ப்ஸில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நகைச்சுவை ததும்ப, தயாரிப்பாளராக இப்படத்தை அறிமுகப்படுத்திய விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் குறித்து நடிகர் பாரத் மற்றும் இயக்குநர் நிரஞ்ஜன் தங்களது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
இதுகுறித்து நடிகர் பாரத் பகிர்ந்து கொண்டதாவது, “இதற்கு முன்பு ‘பிரின்ஸ்’, ‘லவ் டுடே’ போன்ற படங்களில் கதாநாயகனின் நண்பராக நடித்துள்ளேன். தற்போது முதல் முறையாக கதாநாயகனாக நடிப்பது எனக்கு கனவு நனவான தருணம். அதிலும் புதியவர்கள் நாங்கள் ஆறு பேரும் ஒரே படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகிறோம் என்பது இன்னும் மகிழ்ச்சியான விஷயம். எங்களுக்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தேவை. நான் ஒரு பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் குவாலிட்டி செக் ஆபீசராக, அப்பாவி இளைஞனாக நடித்துள்ளேன். எந்தளவுக்கு அப்பாவியான இளைஞன் என்றால், ஒரு பெண் என்னை காதலிக்கிறாள் என்பதைக்கூட உணர முடியாத அளவுக்கு வெகுளித்தனமானவன். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவன், தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான். தாத்தா கதாபாத்திரத்தில் ஆர். சுந்தர்ராஜன் சார் நடித்துள்ளார். எங்களுக்கிடையேயான உறவில் அவரது பழைய கால நகைச்சுவை பாணியையும் ரசிகர்கள் மீண்டும் ரசிக்க முடியும். அதுவே படத்தின் பலமாக இருக்கும்” என்றார்.