நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், அனைவரின் சிறப்பான ஒத்துழைப்பால் வெறும் 40 நாட்களிலேயே படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் ஆழமான குடும்பக் கதையாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனையுடன் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில்..,
படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில், திட்டமிட்டதைவிட முன்னதாக படப்பிடிப்பை முடிக்க முடிந்ததற்கு நடிகர் ஜீவாவின் அபாரமான அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும்தான் முக்கிய காரணம் என்றார். மேலும், கதாநாயகி ரஜிஷா விஜயனின் சிறப்பான ஒத்துழைப்பு, ஒளிப்பதிவாளர் சுகுமாரின் பங்களிப்பு மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பான உழைப்பாலேயே 45 நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பை 40 நாட்களில் நிறைவு செய்ய முடிந்ததாகக் கூறி, அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
‘தகப்பன்’ படத்தின் பயணம் மேலூர் பகுதியில் உள்ள கோயிலில் நடைபெற்ற துவக்க விழாவுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதுடன், மதுரை நகரிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.