வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் இந்த சாதனையை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் 50வது நாள் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, திரைப்படத்திற்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவைச் சேர்ந்தவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு நினைவுப் பரிசுகளாக சீல்டுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் பயணம் மற்றும் அதன் வெற்றியைப் பற்றிய தங்களது அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் யோகி பாபு பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் செல்லா அய்யாவுவுடன் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் இருந்து தொடர்ந்து பயணித்து வருகிறேன். அந்தப் படத்தில் எனக்கு முழு நீளக் கதாபாத்திரம் கொடுத்தவர், இந்தப் படத்தில் சிறிய பகுதியாக இருந்தாலும் முக்கியமான ஒரு இடத்தில் என்னை பயன்படுத்தியிருக்கிறார். ‘கட்டா குஸ்தி’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்துடன் முடிந்துவிடும் என்று நினைத்திருந்த நிலையில், மூன்றாம் பாகத்திற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இறுதியில் அந்த வசனத்தை வைத்தது செல்லா சாரின் திட்டம்தான். அதற்காக அவருக்கு எனது நன்றி,”.
“50வது நாள் வெற்றியைக் கொண்டாடுவது தற்போது மிகவும் அரிதாகிவிட்டது. இந்தப் படத்திற்காக 50வது நாள் விழாவை நடத்தி, கலைஞர்களைக் கௌரவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் 100வது நாள் விழாவையும் கொண்டாடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அனைத்து தயாரிப்பாளர்களும் தங்கள் வெற்றிப் படங்களுக்காக இதுபோன்ற விழாக்களை நடத்தி கலைஞர்களை அழைத்துக் கொண்டாடினால் மகிழ்ச்சியாக இருக்கும். படப்பிடிப்பிலிருந்து நேரம் ஒதுக்கி இதுபோன்ற வெற்றி விழாக்களுக்கு வருவதும் எங்களுக்கு ஒரு மகிழ்ச்சிதான். அமைச்சர் ராஜ்மோகன், பிரபுதேவா மாஸ்டர், ஐசரி கணேஷ் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி,” என்றார்.