KollywoodNow

Tamil CInema Updates

மாணவ படைப்பாளிகளின் 34 திரைப்படங்கள் – இயக்குநர்கள் அறிமுக விழா

தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், எழுத்தாளர், திரை ஆர்வலர் என பன்முக ஆளுமை கொண்ட செழியன், ‘ தி ஃபிலிம் ஸ்கூல்’ எனும் பெயரில் எதிர்கால திரையுலக படைப்பாளிகளுக்கான பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட 34 மாணவ படைப்பாளிகள் ஒன்றிணைந்து 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் புதிய சரித்திரம் படைத்திடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தி ஃபிலிம் ஸ்கூல் செழியனுடன் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், ஸ்ரீகர் பிரசாத்; ஒளிப்பதிவாளர்கள் பி. சி. ஸ்ரீ ராம், ரவிவர்மன்; வரைகலை இயக்குநர் ட்ராட்ஸ்கி மருது; தயாரிப்பாளர்- விமர்சகர் தனஞ்ஜெயன்; இயக்குநர்கள் ஞானராஜசேகரன், ஹரிஹரன்; ஒலிப்பதிவு கலைஞர் தபஸ் நாயக்; திரைப்பட திறனாய்வாளர் மருத்துவர் தாயப்பன்; எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், தமிழ் பிரபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.‌

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் திரு. செழியன் வரவேற்று பேசுகையில், ”வருகை தந்து சிறப்பித்திருக்கும் விருந்தினர்கள், நண்பர்கள், இலக்கிய ஆளுமைகள், என்னுடைய ஃபிலிம் ஸ்கூலில் படித்த மாணவர்கள் என அனைவரையும் வரவேற்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் உலக சினிமா என்ற புத்தகத்தை எழுதுவதற்கு முன் ஜெர்மானிய இயக்குநர் வெர்னர் ஹெர்சாக்கைப் பற்றி படித்தேன். அவர் ஒரு ஃபிலிம் ஸ்கூலில் படிக்கிறார். படித்து முடித்தவுடன் அவர் ஒரு கண்ணாடி கூண்டிற்கு முன் நிற்கிறார். அப்போது அவர் அதிலிருந்து ஒரு கேமராவை கொடுங்கள், நான் படம் எடுத்துவிட்டு தருகிறேன் என்கிறார். அது இன்ஸ்டியூட்டில் உள்ள கேமரா. அதனை கொடுக்க முடியாது என்கிறார்கள். அவர் அன்றிரவு அந்த கண்ணாடி கூண்டை உடைத்து ஒரு கேமராவை எடுத்து, படத்தை எடுத்த பின் மீண்டும் கேமராவை ஒப்படைக்கிறார். அதன் பிறகு அவரைப் பற்றிய நிறைய விஷயங்களை தேடத் தொடங்கினேன். அதன் பிறகு அவர் ரோக் ஃபிலிம் ஸ்கூலில் படித்தார் என்ற தகவலை உறுதியாக பிடித்துக் கொண்டேன். ரோக் என்றால் நாடோடி, கலகக்காரன், ஊர் சுற்றி இப்படி எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம்.

அதன் பிறகு அவர் படித்த ஸ்கூலில் சேர்வதற்கான விதிமுறைகளை ஆராய்ந்தேன். அந்த ஸ்கூலில் சேர வேண்டும் என்றால் 12 புத்தகங்கள் வாசித்திருக்கவேண்டும். எங்கு சென்றாலும் வாகனங்களில் செல்லாமல் நடைப்பயணமாகவே செல்ல வேண்டும். சென்ஸிபிலிட்டி இருக்க வேண்டும். ஒரு நான்கு வயது குழந்தைக்கு அரை மணி நேரம் கவனம் சிதறாமல் கதை ஒன்றை சொல்ல வேண்டும். இதெல்லாம் செய்ய முடியும் என்றால் எங்களுடைய பிலிம் ஸ்கூலில் சேர முடியும் என்கிறார். அவரிடம்‌ பிலிம் ஸ்கூலின் முகவரியை கேட்கிறார்கள். அந்த முகவரி நான்தான் என்கிறார். ஒரு நாடோடியாக இருக்கிறார். நியூசிலாந்தில் இருக்கிறார் என்றால் அங்கு ஒரு பத்து நாள் வகுப்பு நடைபெறும். ஜெர்மனியில் இருக்கிறார் என்றால் அங்கு ஒரு பத்து நாள் வகுப்பு நடைபெறும்.

அதன் பிறகு ஈரானிய இயக்குநர் மக்மல்பாஃப்பை சென்னையில் சந்தித்தேன். அவருடன் மூன்று நாட்கள் உடனிருந்தேன். அவர் ஒரு ஃபிலிம் ஸ்கூலை நடத்திக் கொண்டிருந்தார். உங்களுடைய ஃபிலிம் ஸ்கூலுக்கான சிலபஸ், அட்மிஷன் ப்ரொசீஜர் என்ன என கேட்டேன். ஏதேனும் ஒரு கவிதை புத்தகத்தை ஒரு வாரம் வரை படித்துக் கொண்டிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு ஓவியரை மட்டும் தெரிவு செய்து அவருடைய ஓவியப் படைப்புகளை தொடர்ந்து ஒரு மாதம் வரை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகு ஒரு எழுத்தாளரின் சிறுகதைகளை ஒரு மாதம் வரை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்க வேண்டும் .அதன் பிறகு தினமும் 50 கிலோ மீட்டர் வரை தூரம் வரை சைக்கிள் ஓட்ட வேண்டும் . ஒரு மணி நேரம் நீச்சல் அடிக்க வேண்டும். நான் உடனடியாக உங்களுடைய பிலிம் ஸ்கூலில் நான் சேர இயலுமா எனக் கேட்டேன். அதற்கு அவர், “அரசுக்கு எதிராக திரைப்படம் எடுக்கிறேன் என்று சொல்லி என்னை நாடு கடத்தி விட்டார்கள். நான் ரஷ்யாவில் இருக்கிறேன். ரஷ்யாவில் இருந்து தற்போது இந்தியாவுக்கு வந்திருக்கிறேன். நான்தான் அந்த ஃபிலிம்ஸ் ஸ்கூல்,சி என்றார். அதன் பிறகு அவர், “நான் ஒரு 15 நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களை எல்லாம் ஓரிடத்தில் ஒன்றிணையுங்கள். சேர்ந்து சினிமாவை பற்றி பத்து நாள் பேசுவோம். பதினோராவது நாள் திரைப்படத்தின் பணிகளை தொடங்கி, 15 நாளில் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து விடுவோம்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *