பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று நடைபெற்றது.
நடிகை ராதிகா பேசியதாவது, “உண்மையான வெற்றியைக் கொண்டாட பெருமையாக இந்த மேடையில் நிற்கிறேன். சினிமாவின் நெளிவு சுழிவுகளை பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ஆனால், எந்த விஷயத்தையும் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டேன். இந்தப் படத்தின் டிக்கெட் 150 ரூபாய்க்கு விற்று ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது. ஆனால், சில பெரிய ஹீரோக்களின் படங்கள் ரூ. 1500- ரூ. 2000க்கு டிக்கெட் விற்று பெறும் கலெக்ஷனை விட ‘தாய் கிழவி’ வசூல் பெரியது என்பேன். தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் அப்டேட்டடாக இருக்கிறார். படம் பார்த்துவிட்டு கமல்ஹாசன் அவர்கள் என்னிடம் சொன்னார், “ராதிகா இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். ஏனெனில், ராதிகா நல்ல நடிகை, சினிமாவில் ஜெயித்துவிட்டார். அதுபோல இயக்குநர் சிவகுமார், தொழில்நுட்பக்குழுவினர், புதுமுக நடிகர்கள் என அனைவரும் ஜெயிக்க வேண்டும். அதற்காக இந்தப் படம் ஜெயிக்க வேண்டும்” என்றார். அது நடந்துவிட்டது.
ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு இயக்குநர் சினிமாவை மாற்றுவார். அதுபோல, இப்போது சிவகுமாரின் காலம். இயக்குநர் பாரதிராஜா சினிமாவில் புரட்சி செய்ததை போல, சிவகுமாரும் செய்வார். ஒவ்வொரு கேரக்டரையும் அழகாக கொண்டு போய் சேர்த்துள்ளார். ஒவ்வொரு கதாநாயகிக்கும் அடுத்த படம் என்ன என்ற ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். வயதையும் அழகையும் அடுத்தவர்களுக்கு நாம் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? தேவையில்லை. நம்மை நமக்கு தெரிந்தால் போதும். பெண்களுக்கான வெற்றியாக ‘தாய் கிழவி’ படத்தைப் பார்க்கிறேன். கதைதான் இங்கு கிங். பெண்களின் குரலை கேட்கும் ஆண்கள் இருக்கும்வரை இந்த சமுதாயம் என்றும் கெடாது. தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஹீரோயினுக்கு லாபத்தில் பங்கு உண்டு என்று தயாரிப்பாளர்கள் சிவாவும் சுதனும் சொன்னார்கள். அந்த பெருமை எனக்கு உண்டு. சினிமாவில் இது நல்ல முன்னுதாரணம். நடிகைகள் சார்பாக நன்றி சொல்கிறேன். இந்த மகிழ்ச்சி பணத்திற்காக இல்லை, நம்பிக்கைக்காகதான். படத்தில் மட்டும் கருத்து சொல்லாமல் அதை நிஜத்திலும் செய்திருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் அவர்களும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இந்தப் படத்திற்கு வரிச்சலுகை தரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறேன். இதனால், இன்னும் நிறைய பெண்கள் இந்தப் படம் பார்ப்பார்கள்” என்றார்.