இலங்கை பின்னணியில் 1988 காலகட்டத்தில் நடக்கும் கதை. போர் மும்முரமாக இருக்கும் சூழலில் இந்திய ராணுவத்தில் இருந்து ஒரு அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பப்பட்ட சமயத்தில் நடக்கும் நிகழ்வு தான் இந்த மொத்த படம்.
மறுநாள் திருமணம் என்கிற நிலையில் முதல் நாள் இரவில் பெண் வீட்டினர் திருமணத்திற்கு தயாராகி வரும் நிலையில் திடீரென இந்திய அதிரடிப்படை அந்த வீட்டில் முன் பகுதியில் முகாமிடுகிறது. பின்னர் தான் தவறான இடத்திற்கு வந்து விட்டோம் என அவர்களுக்கு தெரிந்கிறது.
ஆனாலும் அவர்களைப் போல் இரண்டு திசைகளில் அனுப்பப்பட்ட மற்ற இரண்டு பிரிவு படைகளை தமிழ் ஈழ படை நிர்மூலம் ஆக்கிவிட்ட நிலையில் இந்த குடும்பத்தில் இருப்பவர்களை பணயமாக வைத்து மறுநாள் காலை தங்களை காப்பாற்ற பாதுகாப்பு படை வரும் வரை நேரத்தை கடத்த முயற்சி எடுக்கிறார் அதிரடிப்படையின் தலைவரான நவீன் சந்திரா.
ஆனால் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினர்களின் உணர்வுகளும் திடீரென அங்கே எதிர்பாராமல் ஏற்படும் போராளிகளின் தாக்குதலும் என நிலைமை மாறுகிறது. அந்த இரவு எப்படி கடந்தது ? என்பதே படம்.
இந்திய அமைதிப்படையின் கேப்டனாக வரும் நவீன் சந்திரா, தனது கம்பீரமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். கடமைக்கும், மனிதாபிமானத்திற்கும் இடையே தவிக்கும் ஒரு அதிகாரியின் மனப்போராட்டத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, அந்த வீட்டினருடன் அவர் நடத்தும் உரையாடல்கள் வலிமையானவை.
மற்றொரு நாயகனாக வரும் சனந்த், ஒரு போர்க்காலச் சூழலில் சிக்கிக் கொண்ட இளைஞனின் பயத்தையும், கோபத்தையும் தனது உடல்மொழியின் மூலம் கச்சிதமாகப் பிரதிபலித்துள்ளார். இறுதி காட்சியில் அவரின் நடிப்பு மனதை உருக்கும் விதமாக உள்ளது.
ஈழத் தமிழ் பெண்ணாக நடித்துள்ள ரூபா கொடுவாயூர், ஒரு உணர்ச்சிகரமான காட்சியில் தனது நடிப்பால் அனைவரையும் வியக்க வைக்கிறார். குடும்பத் தலைவியாக வரும் கபில வேணு, தனது அமைதியான மற்றும் ஆழமான நடிப்பின் மூலம் போரின் வலியைப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறார். ராணுவ வீரர்களாகவும், குடும்ப உறுப்பினர்களாகவும் நடித்திருக்கும் மற்ற துணை நடிகர்கள் யதார்த்தமான நடிப்பை வழங்கி கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.
செல்வரத்தினம் பிரதீபன், ஒரு வீட்டிற்குள்ளேயே நடக்கும் கதையை சலிப்புத் தட்டாமல், போர்க்காலத்தின் மங்கலான வெளிச்சத்திலும், பதற்றமான சூழலிலும் மிக நேர்த்தியாகப் படமாக்கியுள்ளார்.
இசையமைப்பாளர் கே அவர்களின் பின்னணி இசை, படத்தின் அமைதியையும், திடீர் திருப்பங்களையும் அழகாகக் கையாள்கிறது. தேவையற்ற சத்தங்கள் இன்றி மர்மத்தை நீடிக்கச் செய்ததில் இசையின் பங்கு அதிகம்.
இயக்குனர் சோமீதரன், ஒரு ஈழத் தமிழராகத் தனது மக்களின் வலியை எந்தவிதமான மிகைப்படுத்தலும் இன்றி, செயலை விட கதாபாத்திர உளவியலில் தீவிர கவனம் செலுத்தும் ஒரு ‘சேம்பர் டிராமா’ பாணியில் சிறப்பாக இயக்கியுள்ளார். பெரும் போரை ஒரு வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்களின் மூலம் காட்டிய விதம் பாராட்டுக்குரியது.
இலங்கை போர் குறித்து பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் நீளிரா வித்தியாசமான திரைப்படம்.
நீளிரா – விமர்சனம்