ஸ்ரீவாரி பிலிம் பி. ரங்கநாதன் திரைத்துறையில் அனுபவமிக்க திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக வலம் வருகிறார். ரசிகர்களுக்குப் பிடித்த வகையிலான எண்டர்டெயின்மெண்ட் படங்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற இவர் இப்போது இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோருடன் முதல் முறையாக இணையும் புதிய படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். நியூ ஏஜ் எண்டர்டெயினராக இந்தப் படம் உருவாகிறது. தற்காலிகமாக இந்தப் படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார் மற்றும் ஒளிப்பதிவை சுகுமாரன் கையாள்கிறார்.
படம் குறித்து நடிகர் அதர்வா முரளி கூறும்போது, “திரையுலகில் மிகுந்த அனுபவமும் கொண்ட பி.ரங்கநாதன் சார் போன்ற சிறந்த தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தரமான பொழுதுபோக்கு கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், ஊக்குவிப்பதிலும், அதற்காக செலவு செய்வதிலும் அவருடைய ஈடுபாடு அபாரமானது. இயக்குநர் ராஜேஷின் திரைக்கதைக்கு இவர் தயாரிப்பு செய்து அதில் நான் நடிப்பது பெருமையான விஷயம். முழுக்க முழுக்க எண்டர்டெய்ன்மெண்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களை இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது” என்றார்.
இயக்குநர் எம். ராஜேஷ் கூறும்போது, “காலத்திற்கு ஏற்றாற் போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும். இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் எண்டர்டெயினர் படங்களை ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை. பார்வையாளர்கள் திரையரங்குகளில் அவர்களை மகிழ்விக்கும் இதுபோன்றத் தருணங்களை என் படங்களில் கொடுக்க எனக்கு இடம் கொடுத்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய பி. ரங்கநாதன் சாருக்கும், கதையில் நடிக்க ஒத்துக் கொண்ட அதர்வா முரளி சாருக்கும் நன்றி. இந்தப் படம் மூலம் ரசிக்கத்தக்க பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.