KollywoodNow

Tamil CInema Updates

கண்ணப்பா படத்தின் காட்சிகள் லீக்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’ இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்தியா சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார்.

வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகள் பத்திரிகையாளர்களுக்கு திரையிடும் நிகழ்வு இன்று (மே 30) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், விஷ்ணு மஞ்சு, மதுபாலா, இயக்குநர் முகேஷ் குமார் சிங், படத்தொகுப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
நாயகன் விஷ்ணு மஞ்சு பேசுகையில், “சமீபகாலமாக சில சர்ச்சையான சம்பவங்கள் நடப்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப்பற்றி நான் இங்கு பேச விரும்பவில்லை. அதே சமயம், என்ன நடந்தது? என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். கண்ணப்பா பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது. படத்தின் கிராபிக்ஸ் பணிகள் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. லண்டன் மற்றும் துபாய் நாடுகளிலும், இந்தியாவில் 8 இடங்களிலும் பணிகள் நடக்கிறது. பொதுவாக படத்தின் காட்சிகள் அடங்கிய டிரைவ் இரண்டு காப்பிகள் எடுக்கப்படும். ஒன்று எடிட்டிங் ஸ்டுடியோவுக்கும், மற்றொன்று தயாரிப்பு அலுவலகத்திற்கும் அனுப்பப்படும், இது தான் நம்முடைய வழக்கம். அதன்படி, கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அதன் சில காட்சிகள் டிரைவ் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால், அதை எங்கள் தரப்பு கேட்கவில்லை. கிராபிக்ஸ் நிறுவனத்தினர் எங்கள் முகவரிக்கு அனுப்பி விட்டார்கள். அதாவது, எங்கள் நிறுவன முகவரி மற்றும் ஜி.எஸ்.டி முகவரி என இரண்டு உள்ளது. ஜி.எஸ்.டி முகவரி அப்பாவுடைய இல்லம். அங்கு தான் எங்கள் தொடர்புடைய அனைத்து கடிதம் மற்றும் கூரியர்கள் வரும். சம்மந்தப்பட்டவர்கள் அதை அங்கு சென்று வாங்கிக் கொள்வோம். அதுபோல், எனக்கான அந்த டிரைவ் அந்த முகவரிக்கு வந்திருக்கிறது. அப்போது, மனோஜ் வீட்டில் இருக்கும் இரண்டு பேர் அந்த கூரியரை வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த விசயமே எங்களுக்கு தெரியாது. அப்போது, இரண்டு வாரங்களுக்குப் பிறகு கண்ணப்பா படத்தின் காட்சிகள் லீக் ஆனால் எப்படி இருக்கும், என்ற ஒரு எக்ஸ் பதிவு வெளியானது. அதை வைத்து தான் எங்களுடைய காட்சிகள் அடங்கிய டிரைவ் கைமாறியிருப்பது தெரிய வந்தது. சரி இதை பெரிதுப்படுத்தக் கூடாது என்று நினைத்தேன், சமாதன முறையில் அதை கேட்டோம், ஆனால் அதற்கு சரியான பதில் வரவில்லை. சரி, போலீஸ் மூலம் சமாதனமாக கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்து, அதையும் செய்தோம். அப்போதும் எங்களுக்கு சரியான பதில் வரவில்லை. போலீஸும் முறையாக எப்.ஐ.ஆர் போடாமல் எங்களால் விசாரிக்க முடியாது, என்று சொல்லிவிட்டார்கள். அப்போது கூட இந்த தகவலை ஊடகங்களிடம் நான் தெரிவிக்கவில்லை. போலீஸில் புகார் அளிக்கும் போது, அங்கிருந்த நிருபர் ஒருவர் மூலமாக தான் செய்தியாக வெளியானது. பிறகு என்ன செய்வது என்று அப்பாவிடம் கேட்ட போது தான் வேறு வழியில்லை, எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டிய நிலை வந்தது. இப்போது எப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டோம். போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த காட்சிகள் வெளியானாலும், அதை ரசிகர்கள் நிராகரிக்க வேண்டும் என்பது தான் என் கோரிக்கை. காரணம், நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பு அதில் இருக்கிறது. அந்த உழைப்பை நீங்கள் திரையில் வந்து பார்க்க வேண்டும், என்பது தான் என் ஆசை. அதற்காக தான் நான் இந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன். இது தான் இந்த பிரச்சனை. நான் குடும்ப பிரச்சனைப் பற்றி பேச விரும்பவில்லை. அனைத்து குடும்பத்திலும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. அது சரியாகி விடும். இன்று வரை எனது தம்பிக்கு என்ன பிரச்சனை, ஏன் அவர் இப்படி செய்கிறார், என்று தெரியவில்லை. தெரிந்தால் நிச்சயம் அதை சரி செய்ய நான் முயற்சிப்பேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *