!!
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் திரைப்படமாகப் பதிவு செய்யும் “பிரஜாபதி” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் JCD பிரபாகர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டதுடன், திரைப்படத்தின் நோக்கம், உருவாக்கப் பயணம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் டிரெய்லரை பார்த்து படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் JCD பிரபாகர் பேசியதாவது..,
“இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பல நிகழ்ச்சிகள் இருந்தாலும், ரூபர்ட் ஐயா அழைத்தவுடன் உடனே ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், இது காலத்தின் கட்டாயமாக நடைபெற வேண்டிய ஒரு முக்கியமான முயற்சி என்று நான் கருதுகிறேன்.
இன்றைய சமூகத்தில் நற்செய்தியை அறிவிப்பது மிகவும் அவசியமாக உள்ளது. அந்த நோக்கத்திற்காக உருவாகியுள்ள இந்த திரைப்படம் நிச்சயமாக மக்களின் மனதைத் தொடும் படமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். டிரைலரை மிகவும் அருமையாகவும், தரமாகவும் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இங்கு ‘Tested, Trusted’ என்று கூறினார்கள். ஆனால் நான் சொல்வது, ‘Tested, Trusted and Tasted.’ வேதாகமத்தில், ‘கர்த்தர் நல்லவர் என்றும் ருசித்துப் பாருங்கள்’ என்றும் சொல்லப்பட்டுள்ளது. அந்த அனுபவம் இருந்ததால்தான் இன்று இதை தைரியமாக பகிர்ந்து கொள்ள முடிகிறது.
இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒரு வரத்தை கொடுக்கிறார். ஆனால் எதிர்காலம் குறித்த பயம், குடும்ப சூழ்நிலை அல்லது தைரியக் குறைவு காரணமாக பலர் அந்த வரத்தை பயன்படுத்தாமல் ஒதுங்கி விடுகிறார்கள்.
ரூபர்ட் ஐயா கடந்த 25 ஆண்டுகளாக நாடகங்கள் மூலம் இந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த அர்ப்பணிப்பு உணர்வும், தியாக மனப்பான்மையும் இந்த திரைப்படத்திலும் தெரிகிறது.
இறைவனால் ஆகாத காரியம் எதுவுமில்லை. பலருடைய வாழ்க்கையில் அதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். அதே நம்பிக்கையுடன் இந்த முயற்சியும் வெற்றி பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஒரு திரைப்படத்தை உருவாக்கி, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் சவாலான விஷயம். அதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை. இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு இயேசுவின் நற்செய்தியை எடுத்துச் செல்லும் இந்த முயற்சியில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்.
‘நீங்கள் விசுவாசித்தால் கடவுளுடைய மகிமையைக் காண்பீர்கள்’ என்று வேதாகமம் கூறுகிறது. விசுவாசத்தோடு தொடங்கப்பட்ட எந்த முயற்சியும் தோல்வியடையாது. வெற்றியை அளிக்கும் இறைவன் நம்மோடு இருக்கிறார். இந்த படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”