தமிழ் சினிமாவில் பல கோடீஸ்வரர்களின் கதை வந்திருக்கிறது. அந்த வரிசையில் வித்தியாசமாக வந்திருக்கும் படம் இது. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஏற்கெனவே தமிழில் தனுஷ் நடிக்க ‘வாத்தி’ படத்தை இயக்கியவர். அவரது இரண்டாவது தமிழ்ப் படமாக சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் வெளியாகி உள்ளது.
அப்பா ஒரு நடிகையை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டதால் திருமணம் என்பதின் மீதே வெறுப்பாக இருக்கிறார் சூர்யா. தொழிலதிபர், துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற வீரர் என பெருமை மிக்கவர். திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார் அம்மா ராதிகா. திடீரென அமெரிக்கா சென்று வாடகைத் தாய் மூலம் ஒரு ஆண் குழந்தையுடன் வருகிறார். அந்தக் குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை காரணமாக சிக்கல் வருகிறது. அதனால், வாடகைத் தாயாக இருந்த அமெரிக்காவில் வசிக்கும் மமிதா பைஜுவை அழைத்து வருகிறார்கள். வந்த இடத்தில் சூர்யாவின் குணத்தைப் பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறார் மமிதா. ஆனால், தனக்கும் மமிதாவுக்கும் 20 வயது வித்தியாசம் இருக்க, அதையே காரணம் காட்டி மமிதாவைத் தவிர்க்கிறார் சூர்யா. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சூர்யா பணக்கார மிடுக்கு, கர்வம், ஸ்டைல் எல்லாமே கச்சிதமாகப் பொருந்துகிறது. அம்மாவின் மீது காட்டும் பாசம், அப்பாவிடம் காட்டும் வெறுப்பு என்று கலந்து காட்டும் அந்த நடிப்பில் ரசிக்க வைக்கிறார். அதுவும் அம்மா ராதிகா மறைந்த பிறகு அவரது படுக்கையில் படுத்து அழும் காட்சியில் உருக்கம். ராதிகாவுக்கு சாவாலான பாத்திரம்தான் ஆனாலும் அழகாக நடித்து அசத்திகாட்டுக்கிறார்.
மமிதா பைஜூ படம் முழுவதும் ஆக்கிரமித்து கொண்டிருக்கிறார். படம் முடிந்தந்தும் நம்மையும் ஆக்கிரமிக்து விடுகிறார்.
படத்தில் காமெடியன்கள், வில்லன்கள் என யாருமில்லை. சூர்யாவின் உறவினராக கூடவே இருக்கும் சுனில் ரெட்டி அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்.
ஜிவி பிரகாஷ்குமார் பின்னணி இசையில் நிறைவாய் செய்திருந்தாலும் பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். குறிப்பாக அந்தத் திருமணப் பாடலை சூப்பர் ஹிட்டாக்கி இருக்கலாம், மிஸ் செய்துவிட்டார்.
ஒரே ஒரு பிரம்மாண்டமான வீட்டிலேயே இடைவேளை வரையிலான படம் நகர்ந்து போகிறது. இடைவேளைக்குப் பின் கதை ஊட்டிக்கு நகர்கிறது.
சண்டைக் காட்சிகள் வேண்டும் என்பதற்காக இரண்டு சண்டைக் காட்சிகளை திணித்திருக்கிறார் இயக்குனர். இடைவேளை வரை சுவாரசியமாக, பரபரப்பாக நகரும் திரைக்கதை, இடைவேளைக்குப் பின் வேறு பாதையில் பயணிக்கிறது. அது முதல் பாதியுடன் ஒட்டவில்லை.
சூர்யாவின் அந்த மாதக் கடைசி வெளிநாட்டுப் பயணம் பற்றிய காட்சியை தவிர்த்திருக்கலாம். எப்படி இதை சூர்யா அனுமதித்தான் என்று தெரியவில்லை.
மொத்தத்தில் படம் ஜனரஞ்சனமாக இருக்கிறது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்